
கண்டி, திகன பகுதியில் இரவு நேரத்தில் தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்திருந்த இனவாத கும்பலை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மதியம் இடம்பெற்ற கலவரத்தின் பின்னர் தற்போது ஆங்காங்கு வர்த்தக நிலையங்கள், பள்ளிவாசல்கள், வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் குறித்த கும்பல் திகன பகுதியில் தாக்குதல் நடத்துவதற்காக பெற்றோல் குண்டுகளுடன் வருகை தந்த நிலையில் பொலிஸாரால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், இரவு நேரத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் சுமார் 4 ஆயிரம் பொலிஸார் மற்றும் அதிரடி படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளைய தினம் காலை 6 மணியளவில் சம்பவ இடத்திற்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.