பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மோசடிகள் குறித்து ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாக இன்று (23) ஆஜராகியுள்ளார்.
கடந்த 18 ஆம் திகதி ஆணைக்குழு முன் ஆஜராகுமாறு பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
எனினும் அன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து அங்கு பல்வேறு நிகழ்வுகளில் கலந்துக் கொண்டதால் தனக்கு ஆணைக்குழுவில் முன்னிலையாக முடியாது என பிரதமர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
மத்தல விமான நிலையத்தில் நெல் களஞ்சியப்படுத்தியதில் மோசடி இடம்பெற்றதாக கிடைக்கப் பெற்ற முறைப்பாடு தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு அமைய வாக்குமூலம் வழங்கவே பிரதமர் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இந்த விசாரணைகளுடன் தொடர்புபட்ட வகையில் நெல் சந்தைப்படுத்தல் சபையின் முன்னாள் தலைவர் எம். பண்டார திசாநாயக்க, அமைச்சர் தயாகமகே மற்றும் மத்தல விமான நிலையத்தின் முகாமையாளர் நளின் உபுல் கலன்சூரிய ஆகியோர் ஏற்கனவே ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கியுள்ளனர்.
கைத்தொழில் அமைச்சை இராஜகிரிய பகுதியில் உள்ள தனியார் கட்டடம் ஒன்றில் நடத்திச் சென்ற போது இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் மோசடி தொடர்பில் சாட்சி வழங்க இதற்கு முன்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறித்த ஆணைக்குழுவில் முதற்தடைவையாக முன்னிலையாகி இருந்தார்.