கடந்த வாரம் வியாழக்கிழமை தூரப்பிரதேசம் ஒன்றில் இருந்து பாடசாலைக்கு வரும் பத்து
வயது பாலகன் ஒருவனை தலைமுடி அதிகமாக இருக்கின்றது என அவன் மேல் குற்றம் சுமத்தி
கெக்கிராவ முஸ்லிம் பாடசாலை பிரதி அதிபர் அம்மாணவனை பாடசாலையை விட்டு வெளியே
அனுப்பியுள்ளார்.
தலைமுடியை முற்றாக வெட்டினால் மாத்திரம் பாடசாலை வளாகத்திற்குள் அனுமதிப்பேன்
என்றும் இல்லையேல் பாடசாலைக்கு நீ வரவேண்டாம் என்றும் பலவந்தமாக கூறி வெளியே
அனுப்பியுள்ளார்.
ஹோராப்பொல எனும் பிரதேசத்தில் இருந்து பாடசாலைக்கு சமூகம் தரும் அம்மாணவன் தனது
குடும்பத்தாருடனேயே தினமும் பாடசாலைக்கு சென்றுவருகிறான். தனது ஊரில் இருந்து
பாடசாலைக்கான தூரம் அதிகமாக காணப்படுவதால் தனியே சென்று வருவதற்கு இன்னும்
பக்குவப்படாத நிலையில் உள்ள மாணவன் அவன்.
இம்மாணவனை பிரதி அதிபர் இவ்வாறு பாடசாலையை விட்டு வெளியேற்றியதும் தனது கையில்
ஐந்து சதமேனும் காசு இல்லாததால் அம்மாணவன்
செய்வதறியாமல் வீதியில் தடுமாரிக் கொண்டிருந்திருக்கின்றான். இவ்வேளையில்
அவ்வீதியில் சென்றுகொண்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிளில் அச்சிறுவன் மோதுண்டு
காயமும் அடைந்து போனான். அவ்வேளை அவ்வழியாக வந்த அம்மாணவனின் சகோதரர் ஒருவர் விடயத்தை
கேட்டறிந்து அம்மாணவனின் தந்தைக்கு விடயத்தை தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ஆத்திரமடைந்த அம்மாணவனின் தந்தை பிரதியதிபரை தொடர்புகொண்டு
பேசுகையில் “நான் அப்படித்தான் செய்வேன், உன்னால் என்ன செய்ய முடியும்?
முடியுமானால் போலிசுக்கு போ” என்றெல்லாம் சீற்றமாக பேசியுள்ளார். அப்பாடசாலை அதிபரும்
இச்சம்பவத்தை கண்டும் காணாதது போல் இருந்து விட்டார்.
அம்மாணவனின் தந்தையும் மிக ஆத்திரமடைந்த நிலையில் எமது செய்தி நிருபரிடம்
மேற்படி விடயத்தை தெரிவித்துள்ளார். போலீஸில் முறைப்பாடு ஒன்றை மேற்கொள்ளவும்,
கல்வி திணைக்கள உயர் அதிகாரிகளுக்கு இவ்விடயத்தை தெரிவித்து பிரதியதிபருக்கு
எதிராய் நடவடிக்கை எடுக்கவும் ஆலோசனை கேட்டு நடவடிக்கை எடுப்பதற்கான
ஆயத்தங்களையும் மேற்கொண்டுள்ளார்.
ஹோரப்போலை நிருபர் – மெக்ஸ் நியூஸ்
www.maxnews.ml