Wednesday, February 28, 2018

கிழக்கு கெளத்தாவில் சிரிய அரச படை தரை வழியாக முன்னேற்றம்

சிரியாவின் யுத்த நிறுத்த திட்டத்திற்கு மத்தியில் கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டு கிழக்கு கெளத்தாவில் சிரிய அரச படை தரைவழியாக முன்னேற்றம் கண்டு வருவதாக கண்காணிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தலைநகர் டமஸ்கஸுக்கு அருகில் உள்ள இந்த பிராந்தியத்தின் கிழக்கு முனையில் ஹவ்ஷ் அல் தவாஹிரி பிரதேசத்தில் அரச படை முன்னேற்றம் கண்டிருப்பதாக மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது. இந்த செய்தி குறித்து கிளர்ச்சியாளர் தரப்பில் இருந்து எந்த உறுதியும் அளிக்கப்படவில்லை.

அரச படையின் முற்றுகையில் இருக்கும் கிழக்கு கைத்தாவில் நாளாந்தம் ஐந்து மணிநேர யுத்த நிறுத்தம் ஒன்றை அமுல்படுத்தும் திட்டத்தை ரஷ்யா வெளியிட்டது. இதன்படி அங்கு செவ்வாய் தொடக்கம் சிரிய நேரப்படி காலை 9 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணி வரை யுத்த நிறுத்தம் அமுல்படுத்தப்பட்டபோதும் அங்கு குண்டு வீச்சுகள் இடம்பெற்றன.

இந்த யுத்த நிறுத்த காலத்தில் அரச படை வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களை நடத்தியதாக செயற்பட்டாளர்கள் குறிப்பிட்டனர். எனினும் யுத்த நிறுத்த காலத்தில் பொதுமக்கள் வெளியேறுவதற்கு ஏற்படுத்தப்பட்ட மனிதாபிமான பாதை மீது கிளர்ச்சியாளர்கள் குண்டுகளை வீசியதாக ரஷ்யா குற்றம்சாட்டியது.

இதனால் யுத்த நிறுத்த காலத்தில் ஐ.நா உதவிகள் மற்றும் காயப்பட்டவர்களை வெளியுற்றும் நடவடிக்கை எதுவும் இடம்பெறவில்லை.

ஐ.நா செய்திதொடர்பாளர் ஒருவர், இந்த சண்டையால், தேவையானவர்களுக்கு உதவிகளை செய்ய முடியாமல் போய்விட்டது என்று கூறினார். இந்த பிராந்தியத்தில் அவசர மருத்துவ உதவி தேவைப்படும் 1000 க்கும் அதிகமானவர்கள் வெளியேற்றப்பட வேண்டிய நிலையில் காத்துள்ளனர். தூமா நகரைச் சேர்ந்த 25 வயது சமர் அல் புவதானி பிரான்ஸ் செய்தி நிறுவனத்திற்கு குறிப்பிடும்போது, “ரஷ்யாவின் யுத்த நிறுத்தம் ஒரு கேலிக்கூத்து. ஒவ்வாரு நாளும் ரஷ்யா குண்டுகளை போட்டு எம்மை கொல்கிறது. இங்கிருந்து வெளியேறிச் செல்வதால் எனக்கும் எனது குடும்பத்திற்கும் பாதுகாப்பு கிடைக்கும் என்ற நான் நம்பவில்லை” என்றார்.

2013 ஆம் ஆண்டு தொடக்கம் அரச படையின் முற்றுகையில் உள்ள கிழக்கு கெளத்தாவில் சுமார் 393,000 பேர் சிக்கி உள்ளனர். இந்த பிராந்தியத்தை கைப்பற்றும் முயற்சியாக அரச படை கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக நடத்தும் உக்கிர தாக்குதல்களில் 500க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதாக மருத்துவ வட்டாரம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் யுத்த நிறுத்தம் அமுல்படுத்தப்பட்ட முதல் தினமான கடந்த செவ்வாய்கிழமை கிழக்கு கெளத்தாவில் குறைந்தது 6 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக சிரிய கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது. இவர்களில் இருவர் ஐந்து மணி நேர யுத்த நிறுத்த காலத்தில் பலியாகியுள்ளனர்.

முன்னதாக ‘எவ்வித தாமதமுமின்றி’ 30 நாட்கள் தற்காலிக போர்நிறுத்த அறிவிப்பை உடனடியாக அமுல்படுத்தி, அதனை உறுதி செய்ய வேண்டும் என ஐ.நா பாதுகாப்பு சபை தீர்மானம் நிறைவேற்றி இருந்தது.

ஆனால் சண்டையிட்டு வரும் அனைத்து தரப்பினரும் ஐ.நாவின் யுத்த நிறுத்த தீர்மானத்தை எவ்வாறு அமுல்படுத்துவது என்பதை ஒப்புக் கொண்டதால்தான் தீர்மானம் நிறைவேற்றப்படும் என ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கேய் லவ்ரோவ் தெரிவித்தார். இந்நிலையில் ஐந்து மணிநேர தற்காலி யுத்த நிறுத்தம் நேற்று புதன்கிழமையும் அமுல்படுத்தப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றனர். கிழக்கு கெளத்தாவில் இருந்து மக்கள் தப்பி வருவதற்கான பாதை திறந்திருக்கும் என்று சிரிய இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

எனினும் பிராந்தியத்தில் இருந்து செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் எவரும் வெளியேறவில்லை என்று சிரிய அரச தொலைக்காட்சி குறிப்பிட்டுள்ளது.

சிரிய அரசுக்கு பயந்து கிழக்கு கெளத்தாவில் இருந்து மக்கள் வெளியேறுவதில்லை என்று கிளர்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். விவசாய பூமிகள் மற்றும் சிறு நகரங்களை கொண்ட கிழக்கு கெளத்தா பிராந்தியம் தலைநகர் டமஸ்கஸுக்கு அருகில் கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டில் இருக்கும் கடைசி பகுதியாகும்.

பிராந்தியத்தில் நீடிக்கும் முற்றுகை காரணமாக அங்கும் உணவு மற்றும் மருத்துவ பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் அங்கு பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்திருப்பதோடு உதவிப் பொருட்களை கொண்டுசெல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஐ.நாவின் பிராந்திய மனிதாபிமான இணைப்பாளர் பனோஸ் மெளம்டிசிஸ் குறிப்பிடும்போது, தமது குழு பிராந்தியத்திற்கு மிக நெருக்கமாக இருந்த போதும் கிழக்கு கெளத்தாவுக்கான உதவிகளை தமது குழுவால் விநியோகிக்க முடியாதிப்பதாக தெரிவித்தார்.
Share:

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்

Comments

Featured