Tuesday, January 30, 2018

கனேவல்பொல வாழ் மக்கள் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மானை ஆதரிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

அனுராதபுர மாவட்டத்தில் கெக்கிராவை பிரதேச சபையின் நிர்வாகத்திற்குற்பட்ட கனேவல்பொல கிராமம் முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் ஒரு கிராமம் என்பதில் எவருக்கும் ஐயமில்லை, அப்படியிருந்தும் அரசியல் ரீதியாக இந்த கிராமம் பல பின்னடைவுகளை வரலாறு முழுவதும் சந்தித்து வந்திருக்கின்றது என்பதிலும் மாற்றுக்கருத்துக்கள் எவருக்கும் இருக்க முடியாது. ஒன்பது லட்சத்துக்கும் அதிகமான சனத்தொகை கொண்ட அனுராதபுர மாவட்டத்தில் இருக்கும் ஒவ்வொரு சிங்கள கிராமங்களும் பெற்றுக்கொண்ட வளர்ச்சியுடன் ஒப்பிட்டு நோக்கும் போது கனேவல்பொல கிராமம் மிகுந்த புறக்கணிப்புக்குள்ளாக்கப்பட்டிருப்பது கண்கூடு, அதற்கு காரணம் காலா காலமாக இந்த கிராம மக்களுக்கான ஒரு அரசியல் தலைமைத்துவம் இல்லாமையே ஆகும்.

இந்த கிராம மக்களை சரியாக தலைமை தாங்கி வழி நடத்திச்செல்லக்கூடிய ஒரு உறுதியானதும் நிலையானதுமான தலைமைத்துவம் இல்லாமல் இம்மக்கள் தங்களின் வாக்குகளை எவர் எவருக்கோ அளித்து விட்டு இறுதியில் கைசேதப்பட்டு நிற்பதை வரலாறு பதிவு செய்துள்ளது, பிரதேச சபை தேர்தல்களாக இருந்தாலும் சரி, மாகாண சபை தேர்தல்களாக இருந்தாலும் சரி, பாராளுமன்ற தேர்தல்களாக இருந்தாலும் சரி, காலத்துக்கும் தேர்தலுக்கும் தகுந்தவாறு அரசியல் வியாபாரிகள் அள்ளிக்கொண்டு வந்து நிறுத்தும் வேட்பாளர்களுக்கு இக்கிராம மக்கள் தங்களின் வாக்குகளை அள்ளி இறைத்து வருகிறார்கள், அல்லது சிங்கள அரசியல்வாதிகளுக்கு தங்களின் வாக்குகளை அள்ளி இறைத்து விடுகிறார்கள், விளைவு அரசியல் வியாபாரிகள் தேர்தலின் பிற்பாடு பறந்து போனவுடன் சிறகிழந்த பறவையை போல அரசியல் அடைக்கலமின்றியும் கேட்பார் பார்ப்பார் இன்றியும் நாதியற்று நின்று விடுகிறார்கள்.

இவர்களின் வாக்குகளை அள்ளிச்சென்று அரசியல் அந்தஸ்து அடைந்த எவரும் இவர்களுக்கான அபிவிருத்திகளையோ, இவர்களின் எதிர்பார்ப்புகளையோ நிறைவேற்ற விரும்பாதவர்களாய் தங்களுக்கான மக்களின் அபிவிருத்திகளையும், தங்களின் சுகபோக வாழ்க்கையையும் பார்த்துக்கொண்டு காலம் கடத்தி விடுகிறார்கள், மீண்டும் இன்னுமொரு தேர்தல் வரும்போது பழைய குருடி கதவைத்திறடி என்னும் சொல்லுக்கு ஒப்ப ஏமாற்று நாடகங்களை அள்ளிக்கொண்டு வந்து இம்மக்களின் முன்பு அரங்கேற்றி விடும்போது இம்மக்களும் மீண்டும் ஏமாந்து போய் விடுகிறார்கள் இதுவே காலா காலமாக இம்மண்ணில் நடந்து வருகின்றது, இதன் விளைவு இம்மண்ணுக்கான தனித்துவம் மிக்க அரசியல் தலைமையொன்று உள்ளூராட்சி சபையில் கூட அமர முடியாமை. 

காலாகாலமாக இம்மக்கள் செய்து வரும் தவறான அரசியல் இந்த கிராமத்தில் உதிக்கும் இன்னும் பல தலைமுறைகளை சீரழிக்கும் என்பதில் அணுவளவேனும் சந்தேகம் இருக்கப்போவதில்லை. கனேவல்பொல கிராமத்தில் ஏராளமான வளப்பற்றாக்குறைகள் இருக்கின்றன, கல்வி விடயத்தில் இன்னும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கின்றன பாடசாலையில் ஆசிரியர் பற்றாக்குறை, வளப்பற்றாக்குறை என்பன பரிபூரணமாக நிலவுகின்றன, கிராமத்தில் சுத்தமான குடிநீர் வசதிக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது, சுத்தமில்லாத குடிநீர் ஏராளமான சிறு நீரக நோயாளிகளை உருவாக்கி விட்டிருக்கின்றது, மழை காலத்தில் நீர் வடிந்தோடக்கூடிய வடிகான் வசதி இல்லாமல் பெரும்பாலான வீடுகள், காணிகள் நீரில் மூழ்கும் நிலை இருக்கின்றது, கெக்கிராவை – கனேவல்பொல பிரதான வீதி குன்றும் குழியுமாக காணப்படுகின்றது இவற்றை சரி செய்வதற்கு எவரும் இல்லை, கர்ப்பிணி தாய்மார்கள் மாதாந்தம் கிளினிக் செல்வதற்கு முறையான ஒரு கிளினிக் வசதி இல்லை, தபாலகம் இன்னும் சீரழிந்த நிலையிலேயே காணப்படுகின்றது, பயணிகள் சௌகரியமாக நிற்கக்கூடிய பஸ் தரிப்பிடம் ஒன்று ஊருக்குள் இல்லை. 

இப்படியான எண்ணற்ற பிரச்சினைகளுடன் கனேவல்பொல கிராமம் தத்தளித்து வருகின்றது, காலாகாலமாக நீங்கள் பாராளுமன்ற தேர்தலில் வாக்களித்து வரும் சிங்ககள பாராளுமன்ற உறுப்பினர்கள் உங்களுக்கான வசதிகளை செய்து தந்தார்களா ? அல்லது உள்ளூராட்சி தேர்தல்களில் நீங்கள் வாக்களிக்கும் முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினர்கள் உங்களின் தேவைகளை நிறைவேற்றி தந்தார்களா ? அதுவுமல்லாது வேறு கட்சிகளை சேர்ந்த அரசியல்வாதிகள் உங்களின் தேவைகளை நிறைவேற்றி தந்தார்களா என்றால் விடை பூஜ்ஜியம்தான், உங்களை அந்த அரசியல்வாதிகள் கறிவேப்பிலையாகவே பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதை நீங்கள் தெளிவாக உணர முடியும். 

அனுராதபுர மாவட்டத்தில் தற்போது, இஷாக் ரஹ்மான், சந்திராணி பண்டார, எஸ்.எம், சந்திரசேன, டி.சி. கமகே, துமிந்த திசாநாயக்க, வீரக்குமார திசாநாயக்க, பீ. ஹரிசன், எஸ்,சி. முத்துக்குமாரண, செஹான் சேமசிங்க, ஆகிய ஒன்பது பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள், இவர்களுள் முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர் என அனுராதபுர மாவட்ட முஸ்லீம் மக்களை பிரதிநித்துவபடுத்துவதற்கு இருக்கின்ற ஒரே ஒருவர் இஷாக் ரஹ்மான் மட்டும்தான் என்பது நாம் பெருமை கொள்ள வேண்டிய விடயம். கடந்த இரண்டரை வருடங்களில் இஷாக் ரஹ்மான் கனேவல்பொல கிராமத்திற்கு என்ன செய்தார் என்று கேள்வியெழுப்பும் மக்களும் இன்று எம்மத்தியில் இல்லாமல் இல்லை, அவர்கள் நன்றாக ஒரு விடயத்தை விளங்கி கொள்ளவேண்டும். 
எமது முஸ்லீம்களின் பாதுகாப்புக்காக சிங்களவர்களை ஆதரிக்க வேண்டும் என்கின்ற மன நிலையில் கூட இக்கிராமத்துக்குள் பலபேர் வாழ்ந்தது கொண்டிருப்பதை பார்க்க முடிகின்றது, இந்த மன நிலை ஆண்டாண்டு காலமாக எம்மையும் எம் வருங்கால சந்ததிகளையும் பெரும்பான்மை மக்களிடத்தினில் அடிமையாக வாழச்செய்யும் என்பதில் கிஞ்சித்தும் சந்தேகம் இல்லை, எமக்கு தேவை எமது அபிவிருத்திகளையும், உரிமைகளையும் பெற்றெடுக்க எம் சமூகத்திலிருந்து ஒருவன்தான் இந்த சிந்தனையில்தான் கடந்த பாராளுமன்ற தேர்தலில் மக்கள் இஷாக் ரஹ்மானை ஆதரித்து வெற்றி பெற வைத்தார்கள். எதிர்கால தேர்தலிலும்அவருக்கான ஆதரவை இம்மக்கள் வழங்கி அவர்களின் பிரதிநிதிகளாக அவரை பாராளுமன்றம் அனுப்பி வைப்பார்கள் என்பது உறுதி, கனேவல்பொல மக்களாகிய நாமும் அவருக்கான ஆதரவை வழங்கி அவரின் வெற்றியில் பங்காளிகளாக சேர்ந்து கொள்வது காலத்தின் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஏனைய சிங்கள அரசியல்வாதிகள் செய்த சேவைகளை விட சகோதரர் இஷாக் ரஹ்மான் அவர்கள் அனுராதபுர மாவட்டத்தில் இருக்கும் ஏராளமான கிராமங்களுக்கு முஸ்லீம் கிராமம் சிங்கள கிராமம் என பார்க்காமல் சேவை செய்துள்ளார், கனேவல்பொல கிராமத்தில் கூட அவரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியோக்கீட்டிலிருந்து கனேவல்பொல பாடசாலைக்கு பெருந்தொகையான நிதியை ஒதுக்கீடு செய்தமை பெருமாபாலனவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஆனால் பாடசாலையுடன் தொடர்புபட்டவர்களுக்கு தெரியும். ஒரு அரசியல்வாதியை உருவாக்கி விடுவதுடன் பொதுமக்களின் கடமை முடிந்து போவதில்லை, அவர்களிடம் சென்று நமக்கான தேவைகளை பெற்றுக்கொள்வதிலும் நாம் ஆர்வம் காட்ட வேண்டும், நாம் அவர்களை தூண்டாமல் அவர்களிடம் சென்று எமக்கான அபிவிருத்திகளை கேட்காமல் அமைதியாக இருந்துவிட்டு அவர் எமக்காக எதுவும் செய்யவில்லை என்று குறை கூறுவதில் எந்த அர்த்தமும் இல்லை. 

கடந்த மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் மகிந்தோதய திட்டம் எனும் பெயரில் ஆயிரம் பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் திட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டபோது எமது கிராமத்துக்கு அண்மையில் இருந்த சிங்கள கிராமத்தின் பாடசாலை ஒன்று சகல வசதிகளுடனும் அபிவிருத்தி செய்யப்பட்டபோது எமது கிராமத்தின் ஒரேயொரு பாடசாலை புறக்கணிக்கப்பட்டது அது ஏனென்று நீங்கள ஆதரிக்கும் சிங்கள பிரதிநிதிகள் கேட்டார்களா அல்லது அபிவிருத்தியை பெற்றுத்தர முயற்சித்தார்களா ? இல்லவே இல்லை கல்வியிலும், பொருளாதாரத்திலும், உட்கட்டமைப்பு வசதிகளிலும் உங்களை மேம்பட வைத்துவிட்டால் நீங்கள் அனைத்து வசதிகளிலும் தன்னிறைவு கண்டுவிட்டால் அவர்களின் தேவை உங்களுக்கு இருக்காது அவர்களை நீங்கள் புறக்கணிப்பீர்ர்கள் என்பதனால்தான் உங்களின் தேவைகளையும், தாகங்களையும் நிறைவேற்றாமல் உங்களை ஒரு அடிமை தனத்தில் அவர்கள் வைத்துக்கொள்ள விரும்புகிறார்கள் என்பதை நீங்கள் உணரவேண்டும்.

இந்த அடிமைத்தனத்தை உடைத்தெறிய நம் முன்னாலுள்ள ஒரு தெரிவு சகோதரர் இஷாக் ரஹ்மான் அவர்களே, அவர் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் இன்னுமொரு தேர்தலில் கூட அவர் வெற்றிபெறுவது அவ்வளவு கஷ்டமான ஒரு காரியமல்ல மக்கள் அவருக்காக வாக்களித்து அவரை தெரிவு செய்துவிட்டு போவார்கள், ஆனால் அவருக்கு மாற்றீடாக நாம் இன்னுமொரு முஸ்லீம் வேட்பாளரை நிறுத்தும்போது அந்த வேட்பாளர் வெற்றி பெறுவது கடினம், புதியவர் என்பதனால் நிறைய உழைக்க வேண்டி ஏற்படும், சில வேளைகளில் இரண்டு முஸ்லீம் வேட்பாளர்களும் தோற்று முஸ்லீம் பிரநிதித்துவத்தை இழக்கவேண்டிய நிலைமை கூட ஏற்படலாம் அப்படி ஏற்பட்டால் அது இன்னும் சிங்கள வேட்பாளர்களுக்கே சாதகத்தை அள்ளிக்கொண்டு வரும். 

கனேவல்பொல கிராம மக்கள் ஒன்றுபட்டு இஷாக் ரஹ்மானை ஆதரிக்க வேண்டியது காலம் நமக்கு சொல்லும் செய்தி

ஆகவே எமது கிராமத்தினதும் மக்களினதும் ஆதரவை இஷாக் ரஹ்மான் அவர்களுக்கு வழங்கி நமது கிராமமும் அவருக்கு ஆதரவு என்பதை அவருக்கு தெளிவாக உணர்த்துவோம், இதனடிப்படையில் அவரிடமிருந்து எமது கிராமத்தின் தேவைகளுக்கான தீர்வுகளை நாம் பெற்றுக்கொள்ள முடியும், அதை விடுத்து நாம் ஒவ்வொரு கட்சிகளுக்கும் பின்னால் சிறு சிறு குழுவாக தொடருமிடத்து எமது தேவைகளை எப்போதுமே நிறைவேற்றிக்கொள்ள முடியாது. 


றசானா மனாப் 




Share:

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்

Comments

Featured