Wednesday, October 16, 2019
பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என அறிவுறுத்தல்
மட்டக்குளிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிறிஸ்தவ தேவாலயம் மற்றும் அதற்கு அருகில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றுக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான வாகனம் ஒன்று உள்ளதாக மட்டக்குளிய பொலிஸ் நிலையத்திற்கு தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
பின்னர் அது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ள நிலையில், இதன்போது அதிசொகுசு கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த காரில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணமாக நேற்று (15) இரவு குறித்த இடத்திலேயே காரை நிறுத்திச் சென்றதாக வாகனத்தின் உரிமையாளர் தெரிவித்ததாக பொலிஸார் அறிக்கை ஒன்றை வௌியிட்டு குறிப்பிட்டுள்ளனர்.
இன்று (16) காலை குறித்த கார் இவ்வாறு வீதிக்கருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை தொடர்ந்து பாடசாலை சென்ற மாணவர்கள் மற்றும் பெற்றோர் பீதியடைந்துள்ளனர்.
பின்னர் குறித்த இடத்திற்கு வாகனத்தின் உரிமையாளர் வந்துள்ள போதும், வாகனம் தொடர்பில் பொய்யான வதந்திகள் பரவியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், குறித்த காரில் எவ்வித சந்தேகத்திற்கிடமான பொருட்களும் காணப்படவில்லை எனவும் பொலிஸ் ஊடக பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.