கெக்கிராவ கனேவல்பொலயில் "ரிவர்சைட் போய்ஸ்" இளைஞர்கள் அமைப்பினாள் ஏற்பாடு செய்யப்பட்ட டெங்கு ஒழிப்பு சிரமதானம் இன்று (3) ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் நடைபெற்றது. கனேவல்பொல பஸார், கனேவல்பொல ஆற்று வீதி ஆகிய பொது இடங்களில் இந்த சிரமதானம் நடைபெற்றது.
கெக்கிராவ சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் நிருவாக பொதுச்சுகாதார ஆய்வாளர் கெ. கருனாதிலக அவர்களின் பிரதான மேற்பார்வையில் இச்சிரமதான நிகழ்வு நடைபெற்றதோடு, கனேவல்பொல பிராந்திய பொதுச்சுகாதார வைத்திய அதிகாரி டி.எம்.சி.எச்.திஸாநாயக்க, மரதங்கடவல பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் எஸ்.எம்.டி. சமரகோன், பொலிஸ் சார்ஜன் பண்டார ஆகியோரும் இச்சிரமதான நிகழ்வில் கலந்துகொண்டு மேற்பார்வை செய்தனர்.
நாட்டின் பல பாகங்களிலும் டெங்கு அபாயம் அதிகரித்து வருவதனால் முன்னெச்சரிக்கையாக இவ்வாறான சிரமதான நிகழ்வுகளை ஏற்பாடு செய்வது பாராட்டத்தக்க விடயம் என்றும் மக்கும் குப்பைகள், மக்கா குப்பைகள் என்பவற்றை வேறுபடுத்தி மக்கள் அப்புறப்படுத்தினால் குப்பைகளை சரியான முறையில் முகாமை செய்ய முடியும் என்பதனால் மக்களுக்கு மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை வேறுபடுத்தி அப்புறப்படுத்துவதற்கான விழிப்புணர்வுகளை நடாத்துவதற்கு தாம் ஏற்பாடுசெய்துவருவதாகவும் கனேவல்பொல பிராந்திய பொதுச்சுகாதார வைத்திய அதிகாரி டி.எம்.சி.எச்.திஸாநாயக்க தெரிவித்தார்.
ஐ.எம். மிதுன் கான்